25 இலட்சம் டொலர் மோசடி; வரமுடியாது என அறிவித்த திறைசேரி செயலாளர் விசாரணைக்கு ஆஜர்.!
திறைசேரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 25 இ-லட்சம் அமெரிக்க டொலர் கடன் தவணைப் பணம், மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றமை தொடர்பான விசாரணைகளுக்காகத் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நேற்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
திறைசேரியால் மேற்கொள்ளப்படவிருந்த 25 இலட்சம் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு, உரிய தரப்புக்குச் செல்லாமல் சந்தேகத்துக்கிடமான முறையில் வேறொரு மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்றுள்ளது.
இதுவொரு பாரிய சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விளமளிப்பதற்காகவே நிதி அமைச்சின் செயலாளர் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் (கோப் குழு) அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் விடுத்த அழைப்பை ஏற்று நேற்று குழுவின் முன் சமூகமளிக்க முடியாது எனத் திறைசேரி செயலாளர் உத்தியோகபூர்வமாகக் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தின் தீவிரம் மற்றும் அழுத்தம் காரணமாக, அவர் நேற்று மதியம் 1.00 மணிக்கு நிதிக்குழுவின் முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார்.
இந்த நிதி மோசடியானது கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.