சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவின்ன பாலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை (17) இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆண்டியம்பலம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சோதனையின் போது 33 லீற்றர் 750 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் (45 போத்தல்கள்), மதுபானம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 945 லீற்றர் கோடா (05 பீப்பாய்கள்), 01 எரிவாயு சிலிண்டர் ,01 எரிவாயு அடுப்பு, 01 செப்புச் சுருள் போன்ற பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.