“வாழும் போதே வாழ்த்துவோம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் சுகாதாரப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ..!
“வாழும் போதே வாழ்த்துவோம்” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் கடமையாற்றும் சுகாதாரப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் தூய்மை மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் இந்த விசேட விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை போரதீவுப்பற்று பிரதேசசபையின் வெல்லாவெளி கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன்,பாடுமீன் லயன்ஸ் கழகத்தன் மாவட்ட ஆளுனர் கே.லோகேந்திரன், மாவட்ட ஆளுநர் இணைப்புப்பாளர் பி. சடாச்சரராஜா,லயன் வதூஷகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
“வாழும் போதே வாழ்த்துவோம்” எனும் மகுட வாசகத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமான நிகழ்வானது, மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் அனுசரணையுடன் போரதீவுப்பற்று பிரதேச சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
நமது நகரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதில் முன்னின்று உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களின் சேவையை அங்கீகரிப்பதும், அவர்களைக் கௌரவிப்பதும் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.
கடினமான சூழலிலும் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கு சமூகத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த உயரிய கௌரவம், அவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது சுகாதார பணியாளர்களின் பிள்ளைகளுக்கு காற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பாடுபமீன் லயன்ஸ் கழகத்தினை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதன், உத்தியோகஸ்தர்கள்,ஊழியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.