முச்சக்கரவண்டிகள் கொள்ளை; இருவர் கைது.!
கிரிபத்கொடை, பேலியகொட, வத்தளை மற்றும் களனி ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் முச்சக்கரவண்டி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 61 மற்றும் 75 வயதுடைய, ஹிங்குராக்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, கிரிபத்கொடை பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், அவர் பல பகுதிகளில் முச்சக்கரவண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டது.
சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், நேற்று 06ஆம் திகதி ஹிங்குராக்கொட பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கொள்ளையிடப்பட்ட 04 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்தமை மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.