இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இன்று (06) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளிலும், புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சூரியன் வடதிசைநோக்கிச் செல்லும் காலப்பகுதியாக ஏப்ரல் 05 முதல் 15 ஆம் தேதி வரை காணப்படுவதால், சில பகுதிகளில் அதிக வெப்பம் உணரப்படலாம். இன்று பேருவளை, குருலுபத்த, ரக்வான, கொடகவெல, உடவலவெ மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளுக்கு அருகில் சூரியன் நேரடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் வீசும் எனவும், அதன் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.காலி முதல் பொத்துவில் வரை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால் அந்த கடல் பகுதிகளில் கடல் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம்.
நாட்டைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகள் லேசான அல்லது மிதமான கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடல் மேலும் கொந்தளிப்பாக மாறக்கூடும்எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.