சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்.!
புத்தளம் – உடப்பு பகுதியில் இன்று அதிகாலை திடீரென வீசிய தென்மேல் பருவக்காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதிகாலை வழமைபோல் கடலுக்குச் செல்லத் தயாரான மீனவர்கள், காற்றின் வேகம் அதிகரித்ததை அடுத்து பயணத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள் மற்றும் கரைவலைத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனிடையே, காங்கேசன்துறை முதல் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை கடல் பிராந்தியங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்றும், சில கடல் பகுதிகளில் இது 40 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் அவதானத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.