சிறைகளில் கைதிகள் அதிகரிப்பால் அதிகாரிகளின் பணிசுமை உயர்வு – அமைச்சர் எச்சரிக்கை.!
நாட்டில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமையும் பலமடங்காக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் தொற்றாநோய்கள் பாரிய சுகாதார சவாலாக உருவெடுத்துள்ளதாகவும், வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதம் தொற்றாநோய்களால் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் மக்களில் சுமார் 25 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தாலும், 30 முதல் 33 சதவீதம் வரை நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், நாள்தோறும் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது 36 சிறைச்சாலைகளில் சுமார் 33,500 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 6,000 உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.