கனகராயன்குளத்தில் வனவளத் திணைக்களம் அடாவடி; சத்தியலிங்கம் எம்.பி நேரில் சென்று ஆய்வு.!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம் மற்றும் அதனை அண்மித்த மன்னகுளம், பெரியகுளம், பழையவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் வனவள திணைக்களத்தினால் அடாத்தாக எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள, கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான பொதுமக்களின் முறைப்பாடுகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் நேற்று (02.04.2026) கனகராயன்குளத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பொதுமக்களுடன் நேரில் கலந்துரையாடி பெற்றிருந்தார்.
இதன்போது கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா வடக்கு பிரதேச இணைப்பாளருமாகிய தவேந்திரராசா(அமலன்) அவர்களும் இணைந்திருந்தார்.
மேலும், மக்களின் கோரிக்கைக்கமைய வனவள திணைக்களத்தினால் அடாத்தாக எல்லைக்கற்கள் இடப்பட்ட குறித்த காணிகளையும் பார்வையிட்டிருந்தார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர், வனவளத் திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.



