சட்டவிரோதமாக வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது.!
பதிவுச் சான்றிதழ்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் வாகனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21, 39 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் கந்தானை மற்றும் மீகஹவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்களைத் தயாரித்து வாகனக் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
குறித்த விசாரணைகளுக்கமைய, நேற்று புதன்கிழமை (01) மீகஹவத்த மற்றும் கந்தானை பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 03 கார்கள், 02 ஜீப் ரக வாகனங்கள், 01 லொறி, 01 மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.