தேசிய ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்; நேரில் சந்தித்து வாழ்த்திய ஆளுநர்.!
வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரன், கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தச் சாதனை மாணவனை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று வடக்கு மாகாணத்துக்குப் பெருமை சேர்த்த மாணவனைப் பாராட்டுவதற்காக, ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு. முரளிதரன் ஆகியோர் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்கு நேரடியாக விஜயம் செய்தனர். அவர்களைப் பாடசாலை அதிபர் திருமதி ஐ. நிமல்ராஜ் வரவேற்றார்.
இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தெ.திருக்குமரன் கணிதப் பிரிவில் தேசிய நிலையில் சாதனை படைத்துள்ள அதேவேளை, உயிரியல் பிரிவில் ஆ.கிரிஷாந்த் மற்றும் வர்த்தகப் பிரிவில் செல்வி க.மதுமினி ஆகியோர் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தச் சாதனை மாணவர்களை ஆளுநர் பாராட்டியதுடன், இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் மாபெரும் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர், “கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவர் ஒருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றுள்ளமை, மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது” – என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், “இந்தச் சாதனை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார்.




