சேவையை முடக்கி போராடுவோம்’ பொது மலசலகூட விவகாரத்தில் யாழ் மாநகர சபைக்கு இ.போ.ச எச்சரிக்கை.!
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தின் நிர்வாகம் தொடர்பாக யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையில் இன்று (28) கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய பேருந்து நிலையம் சில மணி நேரங்கள் பரபரப்பான சூழ்நிலையை எதிர்கொண்டது.
முன்னதாக, பல தரப்பினரின் கோரிக்கையை அடுத்து கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த மலசலகூடத்தை அமைக்கும் திட்டம் அனுமதிக்கப்பட்டிருந்தது. இலங்கை போக்குவரத்து சபையின் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்பில் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதுடன், அதற்கான அனுமதியும் அதே நிறுவனத்திடமிருந்தே பெறப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த 13ஆம் திகதி இந்த மலசலகூடத்தை குத்தகைக்கு விடுவதற்காக மாநகரசபை தனிச்செயலாக விண்ணப்பங்களை அழைத்தது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது.இந்நிலையில், இன்று காலை நீர் இணைப்பு வழங்க மாநகரசபை ஊழியர்கள் முயன்றபோது, போக்குவரத்து சபை அதிகாரிகள் அதனைத் தடுத்ததால் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபை, குறித்த நிலப்பரப்பு தங்களது கட்டுப்பாட்டிலுள்ளதாகவும், மாநகரசபை தனிச்செயலாக நிர்வகிக்க முயன்றால் சேவைகளை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளது.
மாறாக, மாநகரசபை உறுப்பினர்கள், இது அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பு என்பதுடன், பொதுமக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட கட்டடத்தைத் திறப்பதில் தாமதமோ தடையோ ஏற்பட்டால் பொலிஸ் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் திறக்கப்படும் என வலியுறுத்தியுள்ளனர்.