மலையகத் தமிழர் உரிமைகள் குறித்து ஜெர்மன் தரப்புடன் மனோ கணேசன் கலந்துரையாடல்.!
மலையகத் தமிழர்களின் வீடு, வாழ்வாதார காணி உரிமை, பெருந்தோட்ட முறை மாற்றம், தொழிலாளர்களை பங்காளர்களாக மாற்றும் அவசியம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜெர்மன் தரப்புக்கு விளக்கமளித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் தூதுவர் ஃபீலிக்ஸ் நியுமன் அவர்களை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து இந்த விவகாரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில், மலையகத் தமிழர்கள் தனித்த தேசிய சிறுபான்மை இனமாகக் கருதப்பட வேண்டும் என்பதையும், அவர்களை வெறும் தொழிலாளர் பிரிவாக மட்டும் காட்டும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்பதையும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். மேலும், உலகளாவிய உதவிகள் உண்மையில் மிகவும் பின்தங்கிய மக்களை அடைகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அதேவேளை, ஜெர்மனியில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் நலவுரிமை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு, நிலச்சார்பற்ற சமூக சபை முன்மொழிவை மேம்படுத்த விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெர்மன் தூதுவர், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் தமக்கு தெளிவு இருப்பதுடன், இவ்விவகாரத்தில் தொடர்ந்து உரையாடலை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.