மானிப்பாய் பிரதேச சபையில் அமளி: தவிசாளருக்கு எதிராக குற்றச்சாட்டு.!
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தவிசாளர் க. ஜெசீதன் தனது இயலாமையை காரணமாகக் காட்டி விசேட கூட்டத்தை நிறுத்தியதாக உறுப்பினர் பகீரதன் குற்றம் சாட்டிய நிலையில், சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
நேற்று நடைபெற்ற அமர்வில் இந்த விவகாரம் எழுந்ததுடன், தவிசாளர் கடந்த சில வாரங்களாக இந்தியா பயணத்தில் இருந்த நிலையில், விசேட கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் காரணமாக உப தவிசாளரை தலைமையாகக் கொண்டு கூட்டத்தை நடத்த உறுப்பினர்கள் முயற்சித்தனர்.
ஒரு மூன்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் கூட்டத்தை நடத்தலாம் என்ற விதிமுறைக்கு அமைவாக 11 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டபோதும், அந்த கூட்டத்தில் தமக்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தால் தவிசாளர் கூட்டத்தை நிறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், தவிசாளர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினரே உட்பட பல உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால் சபையில் அமளி நிலை ஏற்பட்டது.பின்னர், நிறுத்தப்பட்ட கூட்டத்தை எதிர்காலத்தில் எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்து, அதனை குழுநிலை கூட்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.