கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அரச உத்தியோகத்தர்.!
தம்புள்ளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர், தமக்குக் கிடைத்த பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 2 இலட்சத்து 13 ஆயிரத்து 780 ரூபாய் பணத்தை பொலிஸாரின் உதவியுடன் அதன் உரியவரிடம் ஒப்படைத்து நேர்மைக்கான முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.
உத்தியோகத்தர் துஷார ஜயவர்தன, தம்புள்ளை நகரில் பொருட்கள் வாங்கிச் சென்ற பின்னர் வீட்டில் பார்த்தபோது அடையாளம் தெரியாத பையில் பெருமளவு பணம் இருப்பதை கவனித்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்து முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணைகளின் மூலம், அந்தப் பணம் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் பொருளாளருக்குச் சொந்தமானதுஎன கண்டறியப்பட்டது.புனித ரமழான் மாதத்திற்காக சேகரிக்கப்பட்ட நன்கொடையாக இருந்த அந்தத் தொகை, பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நேர்மையான செயல் பொதுமக்களிடமும் பொலிஸாரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.