மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள்.!
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(27) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் சப்ரகமுவ மாகாண பொலிஸ்மா அதிபரின் அவர்களின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது பிரதி அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலே அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள் இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.
அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




