தரமற்ற மருந்துகள் கொள்வனவு; கெஹெலியவுக்கு 75 மில்லியன் ரூபாய் அபராதம்.!
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் பாரிய அபராதங்களை விதித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்களது தனிப்பட்ட அரசாங்கத்திற்கு அபராத தொகைகளைச் செலுத்த வேண்டும்.
அதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சொந்த நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாயை அரசுக்குச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் எஸ்.டி. ஜெயரத்ன ஆகியோர் தலா ரூபாய் 50 மில்லியனை அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜித் குணசேகரா மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பிரதிப் பணியாளரான துஷித சுதர்ஷனா ஆகியோரும் தலா ரூபாய் 50 மில்லியனை அரசிற்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மற்றும் மேலும் இரண்டு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று வெள்ளிக்கிழமை (27) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.