மன்னாரில் 34 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்.!
மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (EDO) கடமை ஆற்றிய 34 பேருக்கு இன்றையதினம் (11) “சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்’ (CO) நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (DO) கடமையாற்றி வந்த 34 பேர், கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சிற்கு மாற்றப்பட்டு சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக (CO) நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமன கடிதங்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் மன்னார் பிரதேச செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,
நடுத்தர வர்க்கத்தில் உள்ள அரச ஊழியர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் மீது எமது அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறான மக்களைப் பொருளாதார ரீதியாக முன்னேற்றக் கூடிய திட்டங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் அதற்குரிய பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். எனவே உங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
அதிலே ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் நீங்கள் பிரதேச செயலாளர் அல்லது பிரஜா சக்தி தலைவர்கள் ஊடாக அதை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
எல்லாருக்குமே இது ஒரு புதிய பணி எந்த ஒரு விடயத்தையும் தனியாக முடிவெடுக்கும் போது தான் பிரச்சினைகள் உருவாக்குகின்றது. எனவே நீங்கள் குழுவாக சேர்ந்து செயல்பட வேண்டும்.
கடந்த அரசாங்கங்களின் காலங்களிலே வழங்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு ஒரு தொகுதியாக தான் சென்று சேர்ந்திருக்கிறது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருந்த நாடுகளுக்கு இடையேயான ஊழல் சுற்றறிக்கையில் 121 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 107 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இடங்கள் முன்னோக்கி வந்துள்ளது. 121 ஆவது இடத்திலே இருப்பதென்றால் எவ்வகையான ஊழல்கள் கடந்த காலங்களில் நடைபெற்றது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
எனவே, ஊழல் மோசடிகளை எமது நாட்டில் இருந்து முழுமையாக துடைத்து எறிவதற்காக தான் இவ்வாறான திட்டங்களை எமது அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதில் எல்லாம் வெளிப்படைத் தன்மையாக இருக்கும். பாதிப்படைந்த மக்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இவ்வாறான திட்டங்கள் உதவும். எனவே நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டி எழுப்புவதற்காக செயல்பட வேண்டும்.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் உங்களுக்குரிய வரப்பிரசாதங்களை அரசாங்கம் அவ்வப்போது வழங்கும். அத்துடன் உங்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளை விரைவாக கிடைப்பதற்குரிய ஒழுங்குகளை நிச்சயமாக அமைச்சரவை மட்டத்திலேயே கலந்துரையாடி பெற்றுத் தருவோம் என்றார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வில், மன்னார் பிரதேச செயலாளர் ம.காந்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜே.ஜூட் மைக்கேல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் 34 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.




