பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தைப்பூசத் திருநாள்.!
தைப்பூசத் திருநாள் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள தமிழர்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களில் வெகு விமர்சையாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் கல்குடா பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் பூசை இடம்பெற்றது.
இதன்போது வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தினை முன்னிட்டு வேல் பாத யாத்திரை இடம்பெற்றது.
தைப்பூசத்தினை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த வேல் பாத யாத்திரை வாழைச்சேனை, கல்குடா, பாசிக்குடா பிரதான வீதி வழியாக பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தினை சென்றடைந்தது.
பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தில் தைப்பூசத்திற்கான பூசைகள் இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய நாளில் தைப்பூசத்தினை முன்னிட்டு இந்து ஆலயங்களில் புதிர் வழங்கும் வைபவமானது சுபவேளையிலிருந்து ஆரம்பமாகி பக்தர்களுக்கு புதிர் வழங்கப்பட்டது.
அந்த வகையில் பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தின் நெற்கதிர் எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் பக்தர்களுக்கு புதிர் வழங்கப்பட்டது.
குறித்த நாளில் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
தை மாத பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணையும் நாள் இந்த தைப்பூச திருநாள் ஆகும். இந்த நாள் தெய்வீக ஞானத்தின் வடிவமான வேலாயுதத்தை முருகப்பெருமானுக்கு பார்வதி தேவி அளித்த நாள் என்றும் எனவே இந்த நாள் ஞானம், வெற்றி மற்றும் செல்வ வளம் பெருகும் நாளாகவும் கருதப்படுகிறது.
பல்வேறு புராண காரணங்கள் தைப்பூசத் திருநாளை பற்றி சொல்லப்படுகிறது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி போர் ஏற்பட்டது இதில் தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அசுரர்கள் தேவர்களை சிறைப்படுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகப்பெருமான், இவர் தேவர்களின் சேனாதிபதியாக இருந்து அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார். இந்த நாளை போற்றும் விதமாகவே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இந்த உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானதாக கருதப்படுகிறது. பிறகு அதில் இருந்து நிலம், உலக உயிர்கள் தோன்றின. அவ்வாறு உலகம் உருவாக தொடங்கிய தினமே தைப்பூசம் என்பது நம் முன்னோர்கள் கூற்று. இதன் நினைவாகவே தான் பல சிவாலயங்களில் தைப்பூச தினத்தன்று “தெப்ப உற்சவ விழா ” சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஞானப்பழத்திற்காக விநாயகரும், முருகனும் போட்டியிட்டு சிவன் – பார்வதியை சுற்றி வந்து விநாயகர் ஞானப்பழத்தை பெற்றதனால், கோபம் அடைந்த முருகப்பெருமான் பழனி மலையில் ஆண்டி கோலத்தில் வந்து நின்றார். அந்த நாளே தைப்பூசம் என்றும் கூறப்படுகிறது. எனவே பழனியில் தைப்பூசத் திருநாள் பத்து நாட்கள் விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அன்னை பராசக்தி பழனி மலையில் ஆண்டி கோலத்தில் நின்ற முருகனுக்கு “ஞானவேல்” கொடுத்த நாளே தைப்பூசத் திருநாள் என்றும் கூறப்படுகிறது.
பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் தைப்பூசம் என்றும், சிதம்பரத்தில் சிவன் பார்வதியாக இணைந்து நடனம் ஆடியதும் இந்த நாளே என்றும் கூறப்படுகிறது. எனவே, தைப்பூசத் திருநாளில் சிவன் மற்றும் பார்வதி தேவியின் வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
27 நட்சத்திரங்களில் பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதையாக இருப்பவர் குருபகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிடைக்கும் என்பது ஐதீகம்.





