நகரசபை தலையீட்டில் சவுத் பார் கடலில் அனுமதி இல்லாத பரிசோதனை பணிகள் நிறுத்தம்.!
மன்னார் சவுத் பார் கடல் பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மதியம் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணி, மீனவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து மன்னார் நகர சபைத் தலைவர் தலையீட்டுடன் உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், குறித்த கட்டுமானப் பணியை மேற்கொண்ட குழுவினர் அப்பகுதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கரைவலைத் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மன்னார் சவுத் பார் கடல் பகுதியில் இன்று குறித்த கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பனங்கட்டு கொட்டு மீனவர் சங்கத் தலைவர், பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து சம்பந்தப்பட்ட குழுவினரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த குறித்த குழுவினர், குறித்த பகுதி தனியார் காணிஎனவும், கடல் நீர் பரிசோதனை நடவடிக்கைக்காகவே இந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், கட்டுமானப் பணி மீனவர்களின் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, மீனவர்கள் உடனடியாக அந்தப் பணியை நிறுத்துமாறு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நகர சபைத் தவிசாளர், குறித்த கட்டுமானப் பணியை பார்வையிட்டதுடன், குழுவினரின் ஆவணங்களையும் பரிசீலித்துள்ளார். நகர சபையிடமிருந்து எவ்வித அனுமதியும் பெறப்படாமல் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதியாகியதை அடுத்து, பணிகளை உடனடியாக நிறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உரிய அனுமதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன் திங்கட்கிழமை (26) மன்னார் நகர சபைக்கு வருகை தந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதுவரை எந்தவொரு கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், உரிய அனுமதி இன்றிப் பொதுமக்களை குழப்பும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் மன்னார் நகர சபைத் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

