சற்று முன் போக்குவரத்து பொலிஸாரை மோதி தள்ளிய வாகனம் மடக்கி பிடிப்பு.!
வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் இன்று (24) இடம்பெற்ற சம்பவமொன்றில், பொலிஸாரை மோதி தள்ளிய சிறிய சரக்கு வாகனம் மற்றும் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கட்டளையை மீறி பயணித்த சிறிய சரக்கு வாகனமொன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவர் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றபோதே, வாகனத்தின் சாரதி திட்டமிட்டு பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது, பொலிஸ் அதிகாரிகள் இருவரும் இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு வீதியின் ஓரத்தில் விழுந்துள்ளனர். அதேவேளை, இரு சக்கர வாகனம் சரக்கு வாகனத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சி, பின்னால் வந்த வாகனமொன்றில் இருந்த நபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனிடையே, பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றபோது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனமும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் நிலையத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
