“இரு சக்கர வாகனப் பந்தயத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன் – பலரை கைது செய்ய அதிரடி உத்தரவு!
ஹொரணையில் நடத்தப்பட்ட இரு சக்கர வாகனப் பந்தயம் ஒன்றில் பங்கேற்றிருந்த 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, காருடன் மோதி மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த மாணவனின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, உயிருக்கு ஆபத்தான முறையில் இரு சக்கர வாகனங்களை ஓட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட ஹொரணை – பல்லப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த கவிந்து தில்ஷான் (21) மற்றும் வல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மனுஷ ஆதித்யா (22) ஆகியோர், எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது பொதுச் சாலையில் ஒரே சக்கரத்தில் இரு சக்கர வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டியதன் காரணமாக, போக்குவரத்து பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது ஒரே சக்கரத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டிய மற்ற இளைஞர்களையும், உயிரிழந்த மாணவன் பங்கேற்ற இரு சக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சட்டவிரோதமாக இத்தகைய போட்டிகளை ஏற்பாடு செய்தவர்கள், நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்தவர்கள் ஆகியோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பணித்துள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி இறுதிச் சடங்கு ஊர்வலங்களின் போது ஒழுங்கீனமாக நடந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.