லங்கா ரைட்’ சைக்கிள் சவாரி போட்டி லேக் ஹவுஸ் முன்னால் இன்று ஆரம்பம்.!
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘லங்கா ரைட்’ நாடளாவிய ரீதியிலான சைக்கிள் சவாரி கொழும்பு, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் இன்று (16) ஆரம்பமாகவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி கண்டி ஊடாக அநுராதபுரம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் கொழும்பு வரை இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 26 அணிகளைச் சேர்ந்த 150 இற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கின்றனர். சைக்கிளோட்டப் போட்டி ஒன்றில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய பரிசுப் பொதியுடனேயே இந்தப் போட்டி நடைபெறுகிறது.
லேக் ஹவுஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த இலங்கையின் மிகப்பெரிய சைக்கிளோட்டப் போட்டியான ‘லங்கா சவாரி’ கடந்த இரண்டு தசாப்தங்களாக நடைபெறாத நிலையில் அதன் தொடர்ச்சியாகவே விளையாட்டுத்துறை அமைச்சு புதிய வடிவில் இந்தப் போட்டியை நடத்தவுள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் கமகேவின் ஆலோசனைக்கு அமைய இந்தப் போட்டி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு லேக் ஹவுஸ் நிறுவனம் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக அனுசரணை வழங்குகிறது.
ஒட்டுமொத்தமாக 450 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த சைக்கிளோட்டப் போட்டி இன்று முதல் நாளில் லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்னால் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி கண்டி வரை செல்லவுள்ளது. இதில் பேலியகொடை வரை சுதந்திர ஓட்டமாக நடைபெற்று அங்கிருந்து போட்டி ஆரம்பிக்கப்படும்.
105 கி.மீ தூரத்தை கடந்து கண்டி, கன்னொருவையில் பிற்பகல் 12.30 மணியளவில் முதலாம் கட்டம் நிறைவடையும்.தொடர்ந்து இரண்டாம் நாளில் கண்டியில் இருந்து அநுராதபுரம் வரை 135.5 கி.மீ தூரத்திற்கு போட்டி நடைபெறும். அநுராதபுரத்தில் இருந்து புத்தளம் வீதி ஊடாக கொழும்பு வரை 208 கி.மீ தூரத்தைக் கடந்து வரும் இந்த சைக்கிள் சவாரி, கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நிறைவடையும். பரிசளிப்பு விழா 18ஆம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
லங்கா ரைட்’ சைக்கிள் சவாரியில் இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய பரிசாக ஒட்டுமொத்த வெற்றியாளருக்கு 600,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த பரிசுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் என 50 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளருக்கு 600,000 இலட்சம் ரூபா பரிசும் இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 500,000 இலட்சமும் மூன்றாம் இடத்திற்கு 400,000 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும்.
தவிர 4 மற்றும் 5 ஆம் இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 300,000 மற்றும் 200,000 ரூபா பரிசு வழங்கப்படும். போட்டியில் முதல் 25 இடங்களை பிடிப்பவர்கள் வரை பணப் பரிசு அளிக்கப்படவுள்ளது.அத்துடன் விசேட பரிசுகளும் வழங்கப்படும். சிறந்த வேக ஓட்ட வீரர், மலையேற்ற வீரர் ஆகியோருக்கு தலா ஒரு இலட்சம் பணப்பரிசும் 23 வயதுக்கு உட்பட்ட சிறந்த இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டு 200,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். சிறந்த அணிக்கு 200,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான நாளாந்த கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 2,500 ரூபா வரையிலேயே கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில் இந்தப் போட்டியில் அந்தத் தொகை 5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சைக்கிள் சவாரி குறித்து கருத்து தெரிவித்த விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் கமகே கூறியதாவது.விளையாட்டுத் துறை அமைச்சினால் இந்த சைக்கிளோட்டப் போட்டியை ஏற்பாடு செய்வதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதல் காரணமும் எமது அடிப்படை நோக்கமும் இலங்கையில் உயர்ந்த விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவதாகும். அதற்கு அனைத்துத் துறைகளின் விளையாட்டுகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
இரண்டாவது காரணம் இலங்கையின் சைக்கிளோட்ட சம்மேளனம் தற்போது தடை செய்யப்பட்டு எமது அமைச்சின் கீழ் உள்ளது. நான் அமைச்சுப் பதவியை ஏற்கும்போதே சைக்கிளோட்ட சம்மேளனம் அமைச்சின் கீழ் இருந்தது. எமக்குக் கீழ் இருக்கும் சம்மேளனம் என்ற வகையில் மீண்டும் அந்த விளையாட்டை கட்டியெழுப்புவது மற்றும் முன்னேடுக்க வேண்டி உள்ளது’ என்றார்.