யாழில் வாடகை வீட்டில் விபச்சார நடவடிக்கை; கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார்.
அந்நிலையில் குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள், ஆண்கள் என பலர் உந்துருளிகள், கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சனிக்கிழமை (10) வீட்டினை முற்றுகையிட்டு, வீட்டில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் அந்த வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் ஆகியோரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.