யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்றையதினம் சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி கடற்கரை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளபட்டது.
இதன்போது மீன்வாடி ஒன்றில் தங்கியிருந்து கடற்தொழில் செய்யும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரின் உடமையில் இருந்து 4.790g ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், ஐஸ் போதைப் பொருளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் நேற்றையதினம் மருதங்கேணி பொலிஸாரால் முற்படுத்தப்பட்டது.
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை செய்ய மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் மேலும் மூன்று நாட்கள் குறித்த சந்தேகநபரை பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கினார்.