வர்த்தக நிலையத்தில் பாரிய கொள்ளை.!
மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (09) அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மிகத் திட்டமிட்ட முறையில் இக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலின்படி, சுமார் 45 இலட்சம் ரூபாய் பணம், 5 பவுண் எடையுள்ள தங்க ஆபரணங்கள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன திருடப்படுள்ளன.
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களைச் சேதப்படுத்தியதுடன் அவற்றின் காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (DVR/NVR) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான சிசிரிவி கமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.