பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!
டித்வா சூறாவளி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக பாடசாலை மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் அனுசரணையுடன் யுனெப்ஸ் விருத்தி அமைப்பின் பங்களிப்புடன் பொகவந்தலாவ, கொட்டகலை, சாமிமலை மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 300 மாணவர்களுக்கும் அதிகமானவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் செயற்பாடுகள் கடந்த 4 மற்றும் 6ம் திகதிகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி செயற்பாடுகளை பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் (சிப்ஸ்) நடைமுறைப்படுத்தியதுடன், குறிப்பிட்ட கற்றல் உபகரணங்களுக்காக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக சிப்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி. கணேசலிங்கம் தெரிவித்தார்.
டித்வா சூறாவளி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக குடும்பங்களுக்கு பல்வேறு நிவாரண பணிகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து குடியேறுவதற்கான வசதிகள் உட்பட பொது இடங்களில் தங்க வைப்பதற்கான உதவிகள் அடங்கலாக பாதிக்கப்பட்ட மலையக குடும்பங்களுக்கு இருப்பிடங்களுக்கான காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி. கணேசலிங்கம் தெரிவித்தார்.
குறிப்பிட்ட பாடசாலை உபகரணங்களை வழங்கும் செயற்பாடுகளில் சிப்ஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, பாடசாலை மாணவர்களும், பெற்றோர்களும் நிறுவனத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொண்ட பாடசாலை அதிபர்கள் கருத்து தெரிவிக்கையில், மலையகத்தில் இயற்கையாகவே மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் மற்றும் அதற்கான வளங்கள் பற்றாக்குறை நிலவிவந்த காலத்தில் இந்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களது கல்வியை முற்றாக இழந்து விடுவார்களோ என்ற அச்சம் எல்லோர் மத்தியிலும் எழுந்திருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிறுவனங்களின் உதவிகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக தொடர்வதற்கு வழி சமைத்து இருக்கின்றது என்ற கருத்தினை முன்வைத்தனர்.
குறிப்பிட்ட கற்றல் உபகரணங்கள் முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் வரையும், ஐந்தாம் தரம் முதல் பத்தாம் தரம் வரையும், பத்தாம் தரத்தில் இருந்து உயர்தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3 கட்டங்களாக பொதி செய்யப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



