மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்.!
‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக தூய்மையான நகரம் ஆரோக்கியமான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் மூன்று நாள் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம், சமுர்த்தி திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என பல்வேறு திணைக்களங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தேவநேசன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார உட்பட மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்றைய தினம் ஆரோக்கிய சூழலுக்கான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
மாமாங்கம், கல்லடி, நாவற்குடா ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகள், கைவிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான பிளாஸ்டிக் பொருட்கள், கொள்கலன்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றினை தூய்மைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செயற்றிட்டத்தின் முதல்நாள் நிகழ்வாக இன்றைய தினம் வீடுகளும் அதனை அண்டிய சூழலும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நாளைய தினம் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் நாளை மறுதினம் திணைக்களங்களை உள்ளடக்கியதான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நகரினை தூய்மைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குவதுடன் தூய்மைப்படுத்தும் பகுதிகளை தொடர்ந்து தூய்மையாக பேணுவதற்கான ஒத்துழைப்பினை வழங்குமாறு மாநகர சபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
வெள்ளத்தின் பின்னரான டெங்கு தாக்கங்கள் அதிகரிக்கும் நிலைமைகள் காணப்படுவதன் காரணமாக மாநகர சபை மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.








