வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம்; சிறீதரன் – சந்திரசேகர் கடும் சொற்போர்.!
நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சொற்போர் மூண்டது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறுகின்றது என்று சிறீதரன் எம்.பி. குற்றஞ்சாட்டினார். தையிட்டி போராட்டக் களத்தில் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை அதற்கு உதாரணம் காட்டினார்.
அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் என்.பி.பி. அரசின் அணுகுமுறையையும் அவர் விமர்சித்தார்.
இதற்குத் தனது உரையின்போது அமைச்சர் இ.சந்திரசேகர் பதில் வழங்கினார்.
“வடக்கில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பல்பொருள் அங்காடி மற்றும் மதுபானசாலை வைத்துள்ள அரசியல்வாதிகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மத்தியில் தமக்கான இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் பொலிஸ் அராஜகம் என்ற விடயத்தைக் கூறி தமிழ் மக்களைக் குழப்பப் பார்க்கின்றனர்.
சிறீதரனே, சுமந்திரனிடம் நீங்கள் அவதானமாக இருங்கள். தமிழரசுக் கட்சி என்பது சீரழிந்துபோன கட்சியாக மாறியுள்ளது. அந்தக் கட்சி போதைவஸ்து கட்சியாகவும் மாறிவிடக்கூடாது.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறவில்லை. அவசரகாலச் சட்டத்தை நாம் தவறாகவும் பயன்படுத்தவில்லை.
தையிட்டி விகாரைப் பிரச்சினையைக்கூட நேர்மையான முறையில் தீர்ப்பதற்கே முயற்சிக்கின்றோம். தமிழ் மக்கள் எம்முடன்தான் உள்ளனர்.” – என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
இதனால் கடுப்பான சிறீதரன் எம்.பி., முதலில் அமைச்சர் திருந்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
என்.பி.பி. அரசின் பொலிஸ் அராஜகம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இடித்துரைத்தார்.