கைதடி வடக்கு பேருந்து சேவை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டும் – மக்களின் சார்பில் கதிர்காமன் சிவபாதம் வேண்டுகோள்!
இடைநிறுத்தப்பட்டுள்ள கைதடி வடக்கிற்கான பேருந்து சேவையை ஜனவரியில் இருந்து மீள ஆரம்பிக்க வேண்டும் என சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமன் சிவபாதம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;
கைதடி வடக்கில் இருந்து யாழ்ப்பாணம் வரையான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையானது காலை, மாலை மாணவர்களை ஏற்றி இறக்கும் சேவையாகவும், மதியம் மருத்துவமனை செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான சேவையாகவும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கைதடி வடக்கு வீதி சீரின்மை என்ற காரணத்தை முன்நிறுத்தி இடைநிறுத்தப்பட்டிருந்த மேற்படி போக்குவரத்துச் சேவையானது கைதடி வடக்கு வீதி காப்பற் வீதியாக புனரமைக்கப்பட்ட பின்னரும் மீள ஆரம்பிக்கப்படவில்லை.தற்போது வீதி சீரின்மையைக் காரணம் காட்டமுடியாது.
பேருந்து சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என சாவகச்சேரிப் பிரதேச சபையின் கடந்த கால அமர்வுகளில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வடமாகாண ஆளுநர், இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட தரப்பினருக்கும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
இடைநிறுத்தப்பட்ட கைதடி வடக்கு வரையான பேரூந்து சேவையை விரைவாக மீள ஆரம்பிக்க வேண்டும் என பொதுமக்களும், பசுந்தேசம் போன்ற பொது அமைப்புகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றன.இந்த சேவை எமது கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்பதனால் விரைவாக செயற்படுத்த ஆவனசெய்யுமாறு எமது மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கைதடி வடக்கிற்கான போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சர், இ.போ.ச யாழ்ப்பாண முகாமையாளர், யாழ்.மாவட்ட அரச அதிபர் மற்றும் தென்மராட்சி பிரதேச செயலர் ஆகியோருக்கும் என்னால் மனுக்கள் வழக்கப்பட்டுள்ளதால் 2026ஆம் ஆண்டு தொடக்கத்திலாவது பேரூந்து சேவை மீள ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.