யாழில் சட்டவிரோதமாக மதுபானத்தை கொண்டு சென்றவர் கைது.!
சட்டவிரோதமாக வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில் கொண்டுசென்ற 13 போத்தல் மதுபானத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுக பகுதியில் நேற்று (5) இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த மதுபானத்தை எடுத்துச் சென்ற நபர் மது போதையில் வாகனத்தை செலுத்தி வந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் இருவேறு குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேநேரம் அரச மதுபான வரையறையை விட அதிக மதுபான போத்தல்களை மேலதிகமாக கொண்டுசெல்ல குறித்த நபர் முற்பட்டுள்ளதாகவும், குறித்த மதுசாரம் அனலைதீவில் சட்டவிரோத வியாபார நடவடிக்கைக்காகவே கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் தீவக பகுதியில் அரச அனுமதி பெற்ற மதுபானங்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதைக்கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது அமைப்புகளும் பிரதேச சபை உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் இன்று குறித்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.