ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டெழும்; கடமையேற்ற கையோடு சூளுரைத்த சாமர எம்.பி.!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயம் மீண்டெழும் என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் தயநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட அவர், இன்று கட்சித் தலைமையகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜே.வி.பியானது 3 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுதான் ஆட்சியைப் பிடித்தது. ஏற்ற, இறக்கங்களை அந்தக் கட்சி சந்தித்தது. இன்று அந்தக் கட்சிக்கு 159 எம்.பிக்கள் இருக்கின்றனர்.
எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நிச்சயம் மீண்டெழும். அதை நோக்கி எமது பயணம் தொடரும். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
கட்சியை விட்டுச் சென்றவர்கள் நிச்சயம் மீண்டும் வருவார்கள். பல வருடங்கள் கட்சித் தலைமையகம் பக்கம் வராதவர்கள்கூட இன்று வந்தார்கள். இதுதான் முன்னோக்கி செல்வதற்கான மாற்றம்.” – என்றார்.