மதுபோதையில் வாகனங்களை செலுத்திய சாரதிகள் கைது.!
நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 424 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 22 பேரும், சந்தேகத்தின் பேரில் 568 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 263 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 141 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 56 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4532 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.