புதிய தலைமை அதிகாரியை நியமித்த உக்ரைன் ஜனாதிபதி!
நாட்டின் இராணுவப் புலனாய்வு அமைப்பின் தலைவரான கிரிலோ புடானோவை (Kyrylo Budanov) தனது புதிய தலைமை அதிகாரியாக (Chief of Staff) உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நியமித்துள்ளார்.ஊழல் வழக்கில் சிக்கி அவரது முந்தைய ஆலோசகர் ஆண்ட்ரி யெர்மாக் (Andriy Yermak) பதவி விலகி, ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.தற்போதைய சூழலில் உக்ரைனுக்குப் பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுவதால், இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த 39 வயதான புடானோவ் சரியான தேர்வாக இருப்பார் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் பல்வேறு துணிச்சலான தாக்குதல்களை முன்னின்று நடத்திய புடானோவ், தற்போது உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் தூதரகப் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பை ஏற்க உள்ளார்.
முன்னாள் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மாக், யுக்ரைன் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக இருந்த போதிலும், எரிசக்தித் துறையில் நடந்த சுமார் 100 மில்லியன் டொலர் ஊழல் முறைகேடு தொடர்பான விசாரணையில் அவரது இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி அவர் தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்த ஊழல் விவகாரம், சர்வதேச அளவில் உக்ரைனின் பிம்பத்தைப் பாதித்துள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் நிலையை இது பலவீனப்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த இக்கட்டான சூழலில், ராணுவ மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மிகுந்த அனுபவம் கொண்ட புடானோவின் நியமனம், உக்ரைனின் பாதுகாப்பு வியூகங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.