துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு.!
நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நேற்று (1) இரவு 10 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாடகைக்காக பெறப்பட்டிருந்த வீடொன்றில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பொரளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேநேரம் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் தெமட்டகொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் ஒருவரின் உடலில் 4 துப்பாக்கி ரவைகளும், மற்றுமொருவரின் உடலில் ஒரு ரவையும் பாய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், இது இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையிலான முன்விரோதமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.