சஜித் தலைவர்; ரணில் ஆலோசகர் – இணைந்து பயணிக்க ஹரின் புதிய யோசனை.!
“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது. சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ், ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இது பற்றி கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அவர் தெரியப்படுத்துவார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்தாலும் பொது விடயங்களின்போது ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டுப் பயணம் இடம்பெறும்.
மீண்டும் நாடாளுமன்றம் வருவதில் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டவில்லை. வலுவானதொரு கூட்டு எதிரணியை உருவாக்கவே அவர் முற்படுகின்றார்.
எனவே, சஜித்தின் தலைமையின் கீழ் ரணிலின் ஆலோசனையுடன் இணைந்து பயணித்தால் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அரசியல் ரீதியில் சவால் விடுக்கக் கூடியதாக இருக்கும்.” – என்றார்.