முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல தரப்பினரும் ஆதரவு வழங்கினர்.
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
மருத்துவர்களின் அசமந்தப் போக்கினாலேயே இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான பின்னணியிலேயே, சிறுமியின் இறப்புக்கு நீதி கோரியும், வைத்தியர்களின் அசமந்தப்போக்கை கண்டித்தும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு வணிக நிறுவனங்கள், அழகக சங்கங்கள் எனப் பல தரப்புகளும் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த போராட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டதோடு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
















