டெங்கு ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 8 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது.
இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் அமித் குமார இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
சுகாதார ஊழியர்கள் சிலருக்கும் டெங்கு நோய் தொற்றியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டம் முழுவதும் தற்போது டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்புச் சோதனைகளின் போது, தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்றாத 1,186 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் (10,225,000) அபராதப் பணம் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக அமித் குமார தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் மாத்திரம் 494 வீடுகள், 134 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், 4 பாடசாலைகள் மற்றும் 2 வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களிலும் எவ்வித தராதரமும் பாராது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமித் குமார மேலும் கூறினார்.










