எதிர்வரும் 13ம் திகதி தொடக்கம் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த அவர்கள் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டம் நேற்று (08.07.2026) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட சத்தியலிங்கம் எம்.பி எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் மேற்படி பதிலை வழங்கியிருந்தார். இதன்போது அவர் தெரிவித்ததாவது,
எமது பகுதிகளில் தற்போது சிறுபோக அறுவடை இடம்பெற்றுவருகின்றது. நெல் சந்தைப்படுத்தும் சபை உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து பதிலளித்த அமைச்சர், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 13ம் திகதி நெல்சந்தைப்படுத்தல் சபை நெல்கொள்வனவினை மேற்கொள்ள ஆரம்பிக்கும் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் 13ம் திகதி நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என்று சொன்னாலும் கொள்வனவு செய்த நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்க போதுமான இடம் இல்லை என தான் அறிந்து கொண்டதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியத்தில் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் நிறைந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனாலும் வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம், செட்டிகுளம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளில் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான களஞ்சியங்கள் காணப்படுவதாகவும் அதேபோல் உலக உணவு திட்டத்திற்கான களஞ்சியமொன்றும் வவுனியாவில் காணப்படுவதாகவும் அவற்றினை இந்த தேவைக்காக பயன்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்.
நெல் சந்தைப்படுத்தும் சபை நெல் கொள்வனவில் ஈடுபடும்போது விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்காது வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுவதையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் விவசாய அமைப்புகளை இச்செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்கள் பயன்பெற ஆவன செய்யுமாறு சத்தியலிங்கம் அவர்கள் கேட்டுக்கொண்டார். பதிலளித்த அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அச்சமயம், அக்கூட்டத்தில் பங்குபற்றியிருந்த கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் தான் அவதானம் செலுத்துவதாகவும் குறித்த களஞ்சியங்களை நெல் சந்தைப்படுத்தும் சபையின் செயற்பாடுகளுக்கு வழங்க ஆவன செய்வதாகவும் தெரிவித்தார். அதேவேளை முல்லைத்தீவிலும் இதே நிலைமை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
மேலும் நெல் சந்தைப்படுத்தும் சபை நெல்லை கொள்வனவு செய்யாததால் தற்போது ஏக்கருக்கு 3500/- விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதாகவும் 1 ஏக்கர் நெற்செய்கைக்கு 141,000/- செலவாகுவதாகவும் நெல்விற்பனை மூலம் 137,500/- மாத்திரமே கிடைப்பதாகவும் இதனால் ஏக்கருக்கு 3500 ரூபா இழப்பு ஏற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்
அதேபோல ஒரு ஏக்கர் உழுந்து செய்கைக்கும் 98,000/- செலவாக, விற்பனை வருமானம் 90,000/- மாத்திரமே கிடைக்கிறது. ஆக ஏக்கருக்கு 8000/- நட்டம் ஏற்படுகின்றது.
நெல் மற்றும் உழுந்து செய்கை ஆகியன எமது மாவட்டத்தில் பிரதான விவசாய பயிராகும். அவ்வாறிருக்க நிர்ணய விலை பின்பற்றப்படாமை காரணமாக குறித்த இரு பயிர்ச்செய்கைகளும் தற்போது நஸ்டத்தில் காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
ஆகவே, இவ்விடயத்தில் துறைசார் அமைச்சரும், அரசாங்கமும் தலையிட்டு விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு உரிய முடிவினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.










