தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!
கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். இந்த வார இறுதியினுள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ சங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தமையுடன், அவர்களின் தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைக்குண்டுகளுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுவினரின் செயற்பாடுகள் நாட்டில் அதிகரித்துள்ளனவா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இப்போதே உடனடியாக எந்தவொரு முடிவுக்குவும் வந்துவிட முடியாது. அத்தோடு, இந்தச் சம்பவத்தைக் காரணம் காட்டி நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன என்றும் கூற முடியாது.
விசாரணைகளின் முழுமையான முடிவிலேயே சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வார இறுதியினுள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் விசாரணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயலுக்கான உண்மையான காரணம் விரைவில் வெளிக்கொணரப்படும்.” – என்றார்.