கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!
களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அம்பத்தலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து நீர் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீரின் தரம் தொடர்பான தேவையான பரிசோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.