தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலன்னாவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் சோதனையிட்டபோது, அவர் மற்றொரு நபரிடமிருந்து போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு வந்திருந்தமை தெரியவந்ததையடுத்து, பொலிஸார் குறித்த நபரின் ஊடாக போதைப்பொருள் விற்பனையாளரை தொடர்புகொண்டு வரவழைத்துள்ளனர்.
இதன்போது 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது வீட்டிலிருந்து மேலும் 75 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர், தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.