தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!
பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று திங்கட்கிழமை (24) முதல் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அனுப்பிய கடிதத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியா நடவடிக்கை எடுத்ததாகவும், அதனுடன் தொடர்புபட்டே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனையடுத்து, இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிர்வாகத்திற்கு அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பிப்பதை இடைநிறுத்தவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தரவு முறைமையை மீளமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் எனவும், தொழிற்சங்க நடவடிக்கை காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படாத தரவுகள் பின்னர் முறைமையில் மீளப் பதிவேற்றப்படமாட்டாது எனவும் சங்கம் எச்சரித்துள்ளது.
பி.எச். மிகஸ்தெனியவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்றும், முன்னதாக அமைச்சுக்கு அனுப்பிய கடிதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது.
அத்துடன், கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் பணியாளர் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் கூறி, அதற்கும் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், நியாயமான விசாரணைக்கு ஒத்துழைக்கவும், குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் தாம் தயாராக இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.