அத்திப்பட்டியாக மாறும் முல்லைத்தீவு; அதிகாரிகளின் சதியா?
முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலையின் மருத்துவக் கிளினிக்கில் கடந்த 19 ஆம் திகதி அன்று ஒரு வைத்தியர் மட்டுமே கடமையில் இருந்ததாகவும், இதனால் 192 நோயாளிகள் இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்காக மதியம் 1.00 மணி வரை உணவின்றி காத்திருந்தும், உரிய மருத்துவ சேவையைப் பெற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான ஒரு நிலை தொடர்ந்துகொண்டிருக்கும்போது, இலங்கை மருத்துவ கல்வியை நிறைவுசெய்த மற்றும் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று வைத்தியர்களுக்குரிய கல்வியை பெற்று வைத்திய நியமனத்திற்க்காக மீண்டும் இங்கு ஒருவருட பயிற்சிக்காக பணிபுரிய வருபவர்களின் பட்டியலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகள் மட்டும் ஏன் கருத்திற்கொள்ளப்படவில்லை?
இது சுகாதார அமைச்சினதும், சுகாதார அமைச்சின் செயலாளரினதும் திட்டமிட்ட புறக்கணிப்பா? அல்லது, மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் ஊடாக வைத்தியர்களின் தேவையைச் சுட்டிக்காட்டி, சுகாதார அமைச்சிடம் உரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுவது உண்மையா?
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை அதிகாரிகள், வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உரிய மட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தத் தவறியதன் காரணமாக ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடா?
மாவட்ட வைத்தியசாலைகளுக்கான பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களில் ஏற்பட்ட குறைபாடுகளா? என கரைத்துறைப்பற்று பிரதேச சபை கெளரவ உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் பல கேள்விகளை சபையில் எழுப்பியுள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த இந்த முக்கியமான விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சிடமும், சுகாதார அமைச்சின் செயலாளரிடமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியர் தேவையை உரிய முறையில் பரிசீலித்து, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் பயிற்சி வாய்ப்புகளை வழங்கி, வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகள் ஏன் வைத்தியர்களுக்கான தொழில் பயிற்சி பட்டியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டன?, இதற்கான பொறுப்பு யாரிடம் உள்ளது?, இது திட்டமிட்ட புறக்கணிப்பா அல்லது மேல்மட்ட நிர்வாகக் குறைபாடா?, மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பயிற்சி வாய்ப்புகளை வழங்க சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என மக்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும், இதற்குரிய விளக்கமும், நியாயமான தீர்வும் கிடைப்பது மட்டுமல்லாமல் எமது மாவட்டத்தின் சுகாதார உரிமைகள் புறக்கணிக்கப்படக் கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இந்தக் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் ஜனநாயக ரீதியில் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.