மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் நேற்று இரவு ஆரம்பமானது.
கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவமும் கப்புறாளைகளினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெற்று வருகின்றது.
கிழக்கிலங்கையில் மிகவும் பழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் திருப்படைக் கோயில்கள் என்றும் அழைக்கப் பெற்றன.
இவ்வாறான பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
போரதீவுற்று பிரதேச செயலாளர் இ.ரங்கநாதன்,ஆலயத்தின் தேசத்துக்கு குருவான சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள், ஆலய வண்ணக்குமார்கள் தலைமையில் திருவிழா அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி ஆலயத்தின் உட் பகுதிக்குள் பாரம்பரிய முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வள்ளியம்மன் ஆலயம் மற்றும் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கு முன்பாகவும் இந்த பாரம்பரிய கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் இத் திருவிழா காலத்தில் தினமும் வேல் தாங்கிய பேழை உள்வீதி வெளிவீதி கொண்டுவரப்பட்டு வீதியுலா நடைபெறும்.
திருவிழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாவியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
நேற்றைய கொடியேற்ற நிகழ்வினை கண்டுகளிப்பதற்கான கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










