“அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தற்பொழுது நடத்தப்பட்டு வரும் விதம் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
எனவே, அவருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் நாட்டின் அரசமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை பாதுகாப்பு அதிகாரிகள் தட்டாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று ஐக்கிய தேசியக் கட்சி அவசர அழைப்பு விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேயின் தற்போதைய நிலை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று விடுத்துள்ள விசேட உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எவ்வாறாயினும், அவர் இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் இந்நாட்டின் பிரஜை ஒருவருக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அனைத்து அடிப்படைப் பாதுகாப்புகளுக்கும் முழுமையாக உரிமையுடையவர் ஆவார்.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விடவும், கைது செய்யப்பட்ட ஒரு நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது அரச அதிகாரிகளால் நடத்தப்படும் விதத்தின் மீதே தற்பொழுது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
எந்தவொரு கைதிக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் சித்திரவதைகள் அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைகள் யாவும், இலங்கையின் அரசமைப்பின் 11 ஆவது சரத்து மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு முற்றிலும் முரணானவையாகும். இதனை எக்காரணம் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாது.” – என்றுள்ளது.
மேலும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள் மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைகளுக்கு எதிரான சட்ட ரீதியான பாதுகாப்புகளைக் கோரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட விதிகளையும் ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் சட்டம் மற்றும் மனிதநேயத் தரநிலைகளை மீறாது, சர்வதேசத்துக்குப் பொறுப்புக்கூறும் வகையில் அதிகாரிகள் கிரமமாகச் செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேலும் வலியுறுத்தியுள்ளது.










