செப்டெம்பரில் பாரிய நெருக்கடி.!
எதிர்வரும் செப்டெம்பர் மாதமாகும்போது இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும், நாட்டில் ‘கோட்டாபய – 02’ போன்றதொரு நிலைமை கூடத் தோற்றம் பெறலாம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
“டொலரைக்கூட முறையாக நிர்வகிக்க முடியாத ஓர் ஆட்சியே தற்போதைய திசைகாட்டி அரசாகும். இதனால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆகும்போது இந்த நாடு பாரியதொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். இந்த நெருக்கடியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கட்டுப்படுத்தவோ அல்லது நிர்வகிக்கவோ முடியாமல் போகும்.
நான் இன்று ஒரு முக்கிய இரகசியத்தைக் குறிப்பிடுகின்றேன். அதாவது ‘மூன்றெழுத்து’ தொடர்பில் அடுத்த 4 மாதங்களுக்குள் இந்த அரசு தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கவுள்ளது. ‘மூன்றெழுத்து’ என்றால் என்னவென்று என்னிடம் கேட்க வேண்டாம். அது எமது கட்சியான எஸ்.பி.ஜே. (ஐக்கிய மக்கள் சக்தி) அல்லது யு.என்.பி. (ஐக்கிய தேசியக் கட்சி) கிடையாது.
அந்த மூன்றெழுத்துடன் இந்த அரசு தீர்க்கமான முடிவுக்குச் சென்ற பிறகு, நாட்டில் ‘கோட்டாபய – 02’ போன்றதொரு மக்கள் எழுச்சி நிலைமை உருவாகும். நாம் இதற்கு முன்னர் எச்சரித்துக் கூறிய அனைத்தும் நாட்டில் நடந்துள்ளன.” – என்றார்.