மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் நினைவு தினம் இன்று!
மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருடைய சமாதியானது புனித மரியால் பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இன்றைய தினம் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூத்த அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார்,அருட்தந்தை இன்னாசியஸ்,சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன், ரி.வசந்தராசா, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் டாக்டர் கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் உறுப்பினர்கள், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் உறவினர்கள் ,களசிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது சமாதியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டதுடன்; அஞ்சலி உரைகளும் நடைபெற்றுள்ளன.