கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!
கொழும்பு, பொரளைப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் நேற்று நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார் என்று பொரளை பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.