உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டம்; சாதாரண இளைஞர்களுக்கு ஒரு சட்டமா?

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்பதை அரசு விளக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து, தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே நாமல் ராஜபக்ஷ எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“அரசின் இத்தகைய இரட்டை நிலைப்பாடும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான இந்த நாடளாவிய கைதும் கவலையளிக்கின்றன. பாடல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான விடயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இசையும் கலைத்துவ வெளிப்பாடும் இப்போது பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமானால், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் இத்தகைய பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது அரசியல் நலன்களுக்காக இத்தகைய பாடல்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்தார் என்று கூறப்படுகின்றது. அப்போது பொலிஸார் எங்கே இருந்தனர்? அப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எங்கே இருந்தது?

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகவே இன்றும் காணப்படுகின்றது. புலிகள் அமைப்பின் கொள்கைகளை எவரும் ஊக்குவிப்பதையோ அல்லது வெளிப்படுத்துவதையோ நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனினும், ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், ஓர் இளம் பாடகரும் ஒரே மாதிரியான செயல்களுக்காகக் குற்றம் சாட்டப்படும் போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்புக் கிடைப்பதும், மற்றவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதும் முற்றிலும் தவறானதாகும்.

அரசியல் நோக்கங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் சட்டத்தை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமும், சாதாரண இளைஞர்களுக்கு பிறிதொரு சட்டமும் இருப்பது ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என்று அரசு நம்பினால், அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்தக் கைது அதிகாரத்தைத் தெரிந்தெடுத்துத் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு செயலாகவே பார்க்கப்படும்.” – என்று நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0