கிரியெல்லவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது.!
இரத்தினபுரி, கிரியெல்ல – மாடுவாகல பகுதியில் நேற்று புதன்கிழமை காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பினரிடையே ஏற்பட்ட கடுமையான தனிப்பட்ட மோதலின் காரணமாக, ஒரு தரப்பால் கைத்துப்பாக்கியொன்றைப் பயன்படுத்தி வானத்தை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரைக் கிரியெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், இந்த மோதலுடன் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்குக் கிரியெல்ல பொலிஸார் வலைவீசியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.